நேந்திரன் புட்டு/பொடிமாஸ்

நேந்திரன் புட்டு/பொடிமாஸ்:
குழந்தைப்பருவம் முதல் உட்கொள்ளும் சத்தான உணவு வகைகளில் ஒன்றாகக் கருதப்படுவது நேந்திரங்காய் அல்லது பழம். இது கேரளா மாநிலத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய ஒரு பழ வகை. இதை காயவைத்தோ அல்லது சமைத்த பக்குவத்திலோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ள தகுதியான ஒரு சத்து மிகுந்த உணவு வகையாக பழக்கத்தில் உள்ளது.
இது சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம். உணவாகவும் அப்படியே சாப்பிடவும் பரிமாறலாம்.

பொடிமாஸ், இது நாட்டு வாழைக்காய் அல்லது நேந்திரங்காயிலும் செய்யலாம், முறை ஒன்றே

செய்முறை விளக்கம்:
வாழைக்காய்-2
வெங்காயம் பொடியாக நறுக்கியது -1 (பெரியது). இது பொடிமஸுக்கு சுவை கூட்டும்.
இஞ்சி-1 அங்குலம் தோல் சீவி,பொடியாக நறுக்கியது


தேங்காய் துருவல்-1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை-5
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி,
கடுகு-1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/4 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம். (இங்கு படத்தில் உதிர்த்து காண்பிக்கப்பட்டுள்ளது).

பிறகு, வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

Valaikkai Podimas